Saturday, November 09, 2013

ஒரு முஹர்ரம் அனுபவம்

15 வருடங்களுக்கு முன் ஒரு ஆஷூரா நாளன்று மாலை ஒரு வீட்டிற்கு துஆ வுக்கு அழைக்கப்பட்டேன்.

அந்த வீட்டில் டைனிங் டேபிளில் பேப்பர் விரித்து அதில் முழுக்க மணலை பரப்பி அதன் நடுவில் மூன்று செம்புக்களில் பூமாலை சுற்றி பால் தண்ணீர் ஜூஸ் மூன்றும் வைத்திருந்தார்கள். மணலில் சந்தணம் தெளிக்கப்பட்டிருந்தது.

எனக்கு ஒன்றும் புரிய்வில்லை. நெடுநேரம் கழித்த பிறகு தான் கர்பலா களத்தை அவர்கள் "செட்" செய்திருப்பது புரிந்தது.

ஆசூரா நாட்களில் கர்பலாவைப் பற்றி இமாம்கள் பேசுவதே மக்கள் இவ்வாறு நடந்து கொள்வதற்கான காரணம் என்று புரிய வந்தது. அதன் பிறகு ஆசூரா வின் சிறப்பிற்கும் கர்பலாவிற்கும் சம்பந்தமில்லை  என்பதை வலியுறுத்த்த ஆரம்பத்தேன். மக்களில் பலரும் தாங்கள் இத்தனை காலமாக ஆஷீரா என்றால் ஹுசைனாரின் நாள் என்று  கருதிக் கொண்டிருந்த்ததாக தெரிவித்தனர்.

ஆஷூரா அன்று  மேற்சொன்ன அனுபவம் கிடைத்தற்கு அடுத்த வாரமே மஹல்லா மக்களை குடும்பத்தோடு அழைத்து இனிமேல் எதை செய்வதாக இருந்தாலும் தீனின் கருத்தை அறிந்து செய்யுங்கள் என்று அறிவுறுத்தினேன். அல்லாஹ்வின் கிருபையால் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு விசயத்திற்கும் இமாமின் கருத்தை அறிந்து செயல்படுகிற பழக்கம் மக்களிடம் ஏற்பட்டது.

கர்பலா இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மிகுந்த துன்பமான ஒரு அரசியல் நிகழ்வு என்றாலும் அதைப் பற்றி அதிகமாக பேசுவது வழி தவறிய ஷியாக்களின் நடைமுறைகளுக்கு வலுவேற்றுவதாக அமைந்து விடும் என்று நான் கருதுகிறேன்.