Tuesday, December 24, 2013

பாக்கியாத் 150 ஆண்டு விழா


அல்லாஹ்வின் கிருபையால் டிஸம்பர் 21,22 ஆகிய தேதிகளில் பாக்கியாதுஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின் 150 ஆண்டு விழா வேலூர் கூனா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சுமார் 9 ஆயிரம் பேர் திரளாக கலந்து கொண்டனர். முறையான அழைப்பும் போதிய விளம்பரமும் இல்லாமலே இவ்வளவு பேர் கலந்து கொண்டது பாக்கியாத்தின் பெருமைக்குச் சான்றாக அமைந்தது. பல ஊர்களிலிருந்து பிரமுகர்கள் சாதாரணமாக கலந்து கொண்டு பாக்கிகியாத்தின் விழாவைப் பார்த்துச் சென்றனர்.  ஒரு வரலாற்று வைபவபவத்தில் கால்பதிக்கும் உணர்வு அவர்களிடம் காணப்பட்டது

விழாவிற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகள் தான் போதிய அளவில் சோபிக்கவில்லை. மொழிவாரி நிகழ்ச்சிகளை தவிர பொது நிகழ்ச்சிகள் எதுவும் மன நிறைவை தரவில்லை.  நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களான பாக்கியாத்தின் தற்போதைய பேராசிரியர்களின் உள்குத்து அரசியல் நிகழ்ச்சி முழுவதிலும் பிரதிபலித்தது. பாக்கியாத்தின் சுயச்சார்பு மேலும் கேள்விக் குறியாகி இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாக்கியாத்தின் பேராசிரியர்கள் பாக்கியாத்திற்கு சேவையாற்றுவதை விட சென்னை காஷிபுல் ஹுதா மதரஸாவிற்க்கு அடிமைச் சேவகம் செய்வதை பெருமையாக கருதுவது அம்பட்டமாக வெளிப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலிர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும் ஆலிம்ககள் கீழே பந்தலில் உட்கார்ந்திருந்த போது காஷில் ஹுதாவைச் சேர்ந்த ஆறு பேர் மேடையில் இருந்தனர்,

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மக்கா சவ்லத்திய்யா மதரஸாவின் முதல்வர் தன்னுடைய அருமையான துஆ வால் ஆலிம்களின் இதயத்தை ஈர்த்தார்.

ஈரோடு சித்தீக் அலி ஹஜ்ரத் தப்லீக்கை ஆதரித்து ஒருதரப்பாக பேசியது பாக்கியாத்தின் ஆசிரியர்கள் உட்பட ஆலிம்களை வெகுவாக அதிருப்தியடையச் செய்தது,  அந்தப் பேச்சின் உடே தப்லீக் அமைப்பு தவறானது என்று ஷைகு ஆதம் ஹஜ்ரத் பத்வா வழங்கினார்கள், அது மறுமலர்ச்சி பத்ரிகையில் இரு பக்க அளவில் பிரசுரமாகியது என்று சித்தீக் அலி ஹஜ்ரத கூறியது ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்த்துவிட்டது. தப்லீக் அமைப்பை பலரும் ஆதரித்தார்கள் என்றாலும் பாக்கியாத்தின் முன்னாள் முதல்வரும் தென்னகம் கண்ட முபதியுல் அஃலம் மாபெரும் சட்ட அறிஞருமான சேக் ஆதம் ஹஜ்ரத் தப்லீகை ஏன் எதிர்த்தார் என்ற கேள்வியை அது எழுப்பத் தவறவில்லை. பாக்கியாத்திலிருந்து இப்படி ஒரு பத்வா வெளிவந்துள்ளதா என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தது அதற்கு சாட்சியாக அமைந்தது,


தமிழ் நிகழ்ச்சியின் இறுதியில் ஓ எம் அப்துல் காதிர் ஹழ்ரத்தின் பேச்சு உருக்கமாக அமைந்தது. நிகழ்ச்சியில் பேசிய பாக்கவிகள் பலரும் கண்கலங்கினர். பாக்கியாத்தில் பயிலும் வாய்ப்பு தங்களுக்கு கிடைத்த பெரும் பேறு என்று பெருமிதம் அடைந்தனர். பெரும் பொருட்செலவில் நடைபெற்ற  இந்நிகழ்வு பாக்கவிகளுக்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்தியை சொன்னது என்ற கேள்வியைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரே காலத்தில் பயின்ற நணபர்களை ஒருசேர சந்தித்த வாய்ப்பு பாக்கவிகளுக்கு ஒரு பொன்னான சந்தர்ப்பமே!