Wednesday, September 21, 2016

ஹஜ்ஜின் நினைவுகள்

அல்ஹம்து லில்லாஹ்
அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன.
ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனினும் ஹஜ்ஜின் நினைவுகளிலிருந்து மனம் இன்னும் மீளவில்லை
ஹஜ்ஜின் நிறைவான ஒரு நிகழ்ச்சியில் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஹாஜிகளிடம் கோரினோம்.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து வந்திருந்த ஒரு தமிழ் நாட்டு ஹாஜி, டயர் வடிவமைப்பில் விற்பன்னர். ரேடியல் டயர் தொழில் நுட்பத்தை முதன் முதலாக உருவாக்கியவர், தனது அனுபவங்களை பேசினார்.
ஐந்து வருடமாக நான் ஹஜ்ஜுக்கு வருவதற்கு முயற்சி செய்கிறோன். கம்பெனியின் பணிச் சுமை காரணமாக ஏதோ ஒரு காரணத்தால் பயணம் தடை பட்டுக் கொண்டே வந்தது. இந்த ஆண்டு இராஜினாமா செய்து விட்டு நாங்கள் ஹஜ்ஜுக்கு வந்தோம். மெக்ஸிகோ பாரிஸ் என உலகின் பல நாடுகளில் நான் வசித்திருக்கிறேன். அங்கு செல்லும் போது என் மனைவியை வீல் சேரில் வைத்துத் தான் அழைத்துச் செல்வேன். அவரால் அதிக தூரம் நடக்க முடியாது. ஆனால் இந்த ஹஜ்ஜுப் பயணத்தில் நாங்கள் ஒரு முறைகூட வீல் சேர் பயன்படுத்த வில்லை. அல்ஹம்து லில்லாஹ், ஹஜ் முடிந்து விட்டது என்றார். கூட்டம் மாஷா அல்லாஹ் என ஆர்ப்பரித்தது.
அந்த அம்மையார் பல இடத்திலும் கண்ணில் கண்ணீர் மல்க நின்றிருந்த இடங்களில் என்ன வேண்டும் என்று அருகே சென்று விசாரித்திருக்கிறேன். ஒன்று மில்லை ஹஜ்ரத் கால் வலி என்று சொல்வார். கால் வலி இல்லாமல் ஹஜ் இல்லை என்று சமாதானம் சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறேன். இந்த செய்தியை கேட்டு கண்கள் கொப்பளிக்க நான் சொன்ன மாஷா அல்லாஹ்வில் ஈரம் அதிகம்
ஹஜ் பயணத்தில் பல் வேறு வசதிகள் வந்து விட்ட போதும் அல்லாஹ் ஹஜ்ஜின் சிரமத்தை உணர்வதற்காக இன்னும் மிச்சம் வைத்திருக்கிற ஒரு வழியாக நடையும் கால் வலியும் இருக்கின்றன. அதிலும் பல சவுகரியங்கள் எஸ்க்லேட்டர் நிழல் தரும் மரங்கள் என இருந்தாலும் அதிக நடையின் காரணமாக கால வலி என்பது ஹஜ்ஜின் பரிசாகவே இன்றும் இருக்கிறது. அது இரசிக்கும் பரிசாக மாறிவிடுகிறது என்பது தான் ஹஜ்ஜின் மகத்துவம் . ஒரு ஹாஜி ஆரம்பத்தில் ஹஜ்ரத் நான் வீல் சேர் வாங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டார். வேண்டாம்! இலேசாகி விடும். தேவை எனில் எந்த இடத்திலும் வாங்கிக் கொள்ளலாம் என்றேன். காலில் பேண்டேஜ் அணிந்து கொண்டே ஹஜ்ஜின் அனைத்து கடமைகளையும் நடந்தே நிறைவேற்றினார் அந்த மேட்டுப் பாளையத்து ஹாஜி.
ஏ.டி.எஸ்.பியாக இருக்கும் ஹாஜி இபுறாகீம் பேசினார்: இரத்தினச் சுருக்கமான வார்த்தையில்
ஹில்டன் சூட்டில் தங்கியிருந்ததை விட மினாவில் தங்கியிருந்தது மிகவும் பிடித்திருந்தது என்றார்.
ஹரமுக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஹில்டன் சூட்டின் வனப்பும் வசீகரமும் விசாலமும் ஒரு உல்லாசமான தங்குதலுக்கும் ஓய்வுக்கும் தூண்டுபவை. வெளியே சந்தித்த ஒரு வர் ஹில்டனில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜா என்று கேட்டாராம். ஆனால் ஹாஜிகள் ஹில்டனிலிருந்து ஹரமிற்கு செல்லும் வசதியை அனுபவிக்கிறார்கள். அதன் உல்லாசதை அல்ல.
மினாவிலிருந்து திரும்பிய ஏடிஎஸ்பியின் பேச்சு ஒன்றை அழுத்தமாக புரிய வைத்தது.
ஹஜ் தனது தத்துவங்களை மக்களுக்குள் ஏற்படுத்த தவறுவதில்லை.
அல்லாஹ் ரப்பு, மக்கள் தனி அடையாளம் ஏதுமற்ற அவனது அடிமைகள் என்பது மினாவின் கூடார வாழ்வு பயிற்றுவிக்கும் பாடம்.
இதை சரியாக உணர்வது ஹில்டனில் தங்குவதை விட சுகமானது.
வருகிற நாட்கள் இந்த டிராக்கில் செல்லும் எனில் ஹஜ்ஜிலிருந்து புறப்பட்ட பயணம் மப்ரூர் ஆகிவிட்டது என்று அர்த்தம்.
அல்லாஹ் கிருபை செய்வானாக!